India vs England test series Tamil News: இங்கிலாந்துக்கு எதிராக, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. தரவரிசையில் 2 ஆம் இடத்தில் உள்ள இந்திய அணி, 4 ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் மோதி வருகிறது. தரவரிசையில் கீழே இருந்தாலும், இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில், டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்துவது என்பது சவாலான விஷயமே. இந்தநிலையில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து அணி 183 ரன்களுக்குள் சுருண்டது.
விளையாடும் XI:
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (wk), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.
இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜாக் கிராலி, ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர் (wk), சாம் கர்ரன், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்திய அணியின் ஆடும் லெவனில் அஸ்வின் இல்லாதது ஆச்சரியமான விஷயமாக இருந்தது. இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க முடிவு செய்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்தினர்.
அதிர்ச்சி தொடக்கம்
முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, ரோரி பர்ன்ஸ் மற்றும் சிப்லி களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரின் 5 ஆவது பந்தில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பர்ன்ஸ் ரன் ஏதும் இன்றி பும்ரா பந்தில் எல்.பி..டபுள்யூ முறையில் வெளியேறினார். பின்னர் சிப்லியுடன் ஜோடி சேர்ந்த கிராலியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 42 ரன்கள் சேர்த்த ஜோடியை சிராஜ் பிரித்தார். கிராலி 27 ரன்கள் எடுத்து ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரூட், ரன் எண்ணிக்கையை உயர்த்த, நான்குகளாக விளாசித் தள்ளினார். இடையில் சிப்லியை 18 ரன்களில் ஷமி அவுட் ஆக்கினார். 70 பந்துகளை சந்தித்த சிப்லி, ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய பேர்ஸ்டோ, நன்றாக விளையாடி வந்த நிலையில் ஷமி பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். 71 பந்துகளைச் சந்தித்த பேர்ஸ்டோ 29 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி அப்போது 138-4 என்ற நிலையில் இருந்தது.
ரூட் நிதான ஆட்டம்
அடுத்த வந்த, லாரன்ஸ் மற்றும் பட்லர் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து அணி ரன் குவிக்க தடுமாறியது. இங்கிலாந்து அணியின் கடைசி நம்பிக்கையான கேப்டன் ரூட் 64 ரன்களில் அவுட் ஆக இங்கிலாந்து அணியின் ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. 108 பந்துகளைச் சந்தித்த ரூட் 11 ஃபோர்களை அடித்து, தாக்கர் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். இங்கிலாந்து அணி அப்போது 155-7 என்ற நிலையில் இருந்தது.
இங்கிலாந்து 183/10
ஒருபுறம் சாம் கரண் நிலைத்து நின்று விளையாடிக் கொண்டிருக்க, அடுத்து வந்த, ராபின்சன், பிராட், ஆண்டர்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டம் 183 ரன்களுக்குள் முடிவடைந்தது. சாம் கரண் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில், பும்ரா (4/46), ஷமி (3/28), தாக்குர் (2/41), சிராஜ் (1/48) என்ற கணக்கில் விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணியின் தடுப்பாட்டம்
பின்னர் முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக, ரோகித் ஷர்மா மற்றும் ராகுல் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறினர். ரோகித் மற்றும் ராகுல் முறையே 40, 39 பந்துகளைச் சந்தித்த இருவரும் தலா 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
ராகுல் அரை சதம்
இரண்டாம் ஆட்டத்தை தொடர்ந்த ராகுலும், ரோகித்தும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்றும் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறினர். இந்திய அணி தனது முதல் விக்கெட்டை 97 ரன்களுக்கு இழந்தது. ராபின்சன் பந்தில் சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து ரோகித் அவுட் ஆனார். அவர் 107 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா 4 ரன்னில் வெளியேறினார். அவர் ஆண்டர்சன் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக கேப்டன் கோலி, முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். கோலி, ஆண்டர்சன் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் ஆனார். பின்னர் களமிறங்கிய ரஹானே 5 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
மழையால் ஆட்டம் பாதிப்பு
இந்திய அணி 46.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ராகுல் (57 ரன்), ரிஷாப் பண்ட் (7 ரன்) களத்தில் உள்ளனர்.
ஜடேஜா அரை சதம்
மூன்றாம் நாள் ஆட்டத்தில் 84 ரன்களுக்கு ராகுல், ஆண்டர்சன் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நிதானத்துடன் ஆடிய ஜடேஜா அரை சதம் கடந்தார். தாக்கூர் டக் அவுட் ஆனாலும், ஷமி 13 ரன்கள் வரை தாக்குபிடித்து ஜடேஜாவுக்கு கை கொடுத்தார். ஜடேஜா 56 ரன்களில் ராபின்சன் பந்தில் பிராட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆச்சரியமாக அடித்து ஆடிய பும்ரா ஒரு சிக்சர் மற்றும் 3 ஃபோர்களுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் ராபின்சன் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து முன்னிலை
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் பர்ன்ஸ் 49 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து சிராஜ் பந்தில் பண்ட்டிடம் பிடிபட்டார். மற்றொரு தொடக்க வீரரான மிகவும் மெதுவாக ரன்கள் சேர்த்து வந்தார். கிராலி 6 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய ரூட் அற்புதமாக அடித்து ஆடி வருகிறார். சிப்லி 133 பந்துகளைச் சந்தித்து 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அவர் பும்ரா பந்தில் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ரூட் சதம்
நிலைத்து நின்று அடித்து ஆடிய ரூட் சதம் அடித்தார். அவர் 109 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்தார். லாரன்ஸ் 25 ரன்களிலும் சாம் கரன் 32 ரன்களிலும் அவுட் ஆகினார். பின்னர் வந்தவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 209 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.
இந்த வெற்றி இலக்கை நோக்கி தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் ரோகித் சர்மாஇருவரும் தொடக்க ஆட்டகாரரர்களாக களமிறங்கினர். இதில் முதல் இன்னிங்சில் அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 38 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து பிராட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள் அடித்தார். இதனால் இந்திய அணி 14 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்திருந்தபோது 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
கடைசி நாள் ஆட்டம்:
தொடக்க வீரர் ரோகித் சர்மா புஜாரா ஆகியோர் தலா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 157 ரன்கள் தேவையாக உள்ளது. தற்போது இந்திய அணி கைவசம் 9 விக்கெட்டுகள் மீதமுள்ளதால், கடைசிநாள் ஆட்டம் இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்ப்பக்கபடுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.