Cricket news tamil: இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய 2 வது ஒருநாள் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை புனேயில் நடந்தது. மிக விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. எனவே தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா இதுவரை ஒரு பந்து கூட வீசவில்லை. இது குறித்து கேப்டன் கோலி கூறுகையில், 'ஹார்டிக் பாண்ட்யாவின் பணிச்சுமையை நாங்கள் நிர்வகித்து (ஒர்க்லோடு மேனேஜ்மென்ட்) வருகிறோம். அவருடைய திறமைகள் 20 ஓவர் போட்டிகளில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இங்கிலாந்தில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் அவரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம். எனவே தான் அவர் இந்த தொடரில் ஒரு பந்து கூட வீசவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
27 வயதான ஆல்ரவுண்டர் வீரர் ஹார்டிக் பாண்ட்யா, 2019ம் ஆண்டு நடந்த உலக்கோப்பை போட்டியில் அவருக்கு ஏற்பட்ட காயத்தால் எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். கடந்த ஆண்டு நடந்த ஐபில் போட்டியில் கூட பந்து வீசாமல் தவிர்த்து வந்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் போட்டிகளில் கூட பந்து வீசவில்லை.
இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடிவுள்ள ஹார்டிக் பாண்ட்யா, சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த அணியோடு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இருந்ததால், அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. பாண்ட்யா இறுதியாக 2018ல் நடந்த டெஸ்ட் தொடரில் தான் பங்கேற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )