21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டனர். இன்றுடன் இப்போட்டிகள் நிறைவடைந்தன.
இதில், ஆஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலம் என மொத்தம் 198 பதக்கங்களை குவித்து முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் ஆக மொத்தம் 136 பதக்கம் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
நேற்றைய 10-வது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 8 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் கிடைத்தன. ஆனால், கடைசி நாளான இன்று இந்தியாவுக்கு ஒரே ஒரு தங்கம் கிடைத்தது. இது இந்தியா பெற்ற 26-வது தங்கமாகும்.
பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் தங்கம் வென்றார். இதே போல 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் இன்று கிடைத்தது. பேட்மிண்டனில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சிராக் - சத்விக் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா - ஜோஸ்னா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. டேபிள் டென்னிசில் சரத்கமல், சத்யன் - மணிகா பத்ரா ஜோடி வெண்கலப்பதக்கம் பெற்றனர்.
ஒட்டுமொத்தமாக, இந்திய அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் ஆக மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை விட இது இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும். அப்போது, 15 தங்கம் உள்பட 64 பதக்கம் பெற்று இந்தியா 5-வது இடத்தை பிடித்து இருந்தது. இப்போது, 26 தங்கங்களுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது.
இதைத் தொடர்ந்து, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில், இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரிகோம் தேசிய கொடியை ஏந்திச் சென்றார்.