தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கும், தென்.ஆ., ரசிகர் ஒருவருக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது. அதான்... தண்ணீர் அளவு பூஜ்ய நிலைக்கு சென்ற, உலகின் முதல் வறட்சி நகரமாக அறிவிக்கப்பட்ட கேப்டவுன் நகரம் தான். ஆனால், அங்கு கிரிக்கெட்டின் மாண்புகளும் வறண்டு போயிருக்கும் சம்பவம் இன்று அரங்கேறி இருக்கிறது.
ஆஸ்திரேலியே அணியின் டேவிட் வார்னர் 30 ரன்னில் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பிய போது, அங்கு இவருக்கென்றே காத்திருந்த தென்னாப்பிரிக்க ரசிகர் ஒருவர், வார்னரின் மனைவி குறித்து கீழ்த்தரமாக விமர்சித்து இருக்கிறார். இதனால், வார்னருக்கும் அந்த ரசிகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 10 தென்.ஆ ரசிகர்கள், ஆஸி., வீரர்களை மோசமாக விமர்சனம் செய்ததால் இன்று மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே, வார்னரின் குடும்பத்தை தரக்குறைவாக விமர்சித்து உள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் பெயர் போனவர்கள் என்பதை கிரிக்கெட் உலகம் அறியும். அதற்காக ஒரு குறிப்பிட்ட ஆஸ்திரேலிய வீரரை ரவுண்டு கட்டி அடிப்பதை, குறிப்பாக அவரது மனைவியை டார்கெட் செய்து விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
எந்த விளையாட்டாக இருந்தாலும், ஒரு வீரரின் தனிப்பட்ட விஷயத்தை விமர்சனம் செய்வது என்பது செயலற்ற தனம் என்று தான் கூற முடியும்!. குறிப்பாக, ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொள்வதை ரசிக்க முடியவில்லை.
கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டும் ஜென்டில்மேனாக இருந்து பிரயோஜனமில்லை. ரசிகர்களும், ஜென்டில்மேன்களாக நடந்து கொண்டால் தான் கிரிக்கெட் எனும் விளையாட்டு வாழும்!.