சென்னையைச் சேர்ந்த குகேஷ், நாட்டின் இளம்வயது கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.
டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் தொடரில் வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் குகேஷ் இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார். இதன்மூலம் நாட்டின் இளம்வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பிரக்ஞானந்தாவின் சாதனையை அவர் முறியடித்திருக்கிறார். முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த தொடரில் வெற்றிப் பெற்றதன் மூலம், நாட்டின் இளம் வயது செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா தனது 12 வயது 10 மாதங்கள், 13 நாளில் நிறைவு செய்தார். ஆனால், குகேஷ், 12 வயது 7 மாதங்கள் மற்றும் 17 நாட்களில் இந்தச் சாதனையைத் தன்வசப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டியலில் குகேஷ் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதற்கான முதல் படிநிலையை கடந்தாண்டு ஏப்ரலில் நடைபெற்ற பாங்காக் ஓபன் செஸ் தொடரில் குகேஷ் நிறைவு செய்தார். அந்தத் தொடரின் முடிவில் அவர் மூன்றாவது இடம் பிடித்திருந்தார். பின்னர் கடந்த டிசம்பரில் செர்பியாவின் பிராச்சினில் நடைபெற்ற ஆர்பிஸ்-2 ரவுண்ட் ராபின் தொடரில் இரண்டாவது படிநிலையை எட்டினார்.
இதையடுத்து, ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற சன்வே சிட்ஜெஸ் தொடரில் மூன்றாவது படிநிலையை எட்டுவதில் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்தத் தொடரில் கிராண்ட் மாஸ்டர் டேனியலுக்கு எதிரான போட்டியில் அவர் வெற்றியைப் பதிவு செய்திருந்தால், உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்திருப்பார்.
நாட்டின் 59வது கிராண்ட் மாஸ்டரான குகேஷ், உலக சாதனையைத் தவறவிட்டது குறித்து அதிருப்தி இருந்தாலும், தற்போது அதை எட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
உலகின் இளம் வயது சாம்பியனாக ரஷ்யாவின் கர்ஜாகின்(12 வயது, 7 மாதம்) தேர்வாகியுள்ளார். குகேஷை விட இவர் 17 நாட்கள் மட்டுமே இளமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.