Harbhajan Singh cheating case : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ஹர்பஜன் சிங் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் 4 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகர காவல்துறையிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹர்பஜன் சிங் அளித்த புகாரில், மகேஷ் என்ற தொழிலதிபர் நண்பர்கள் மூலம் எனக்கு அறிமுகமானார். 2015ஆம் ஆண்டு என்னிடம் 4 கோடி கடன் வாங்கினார். அதன்பின்பு, அவரை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி 25 லட்ச ரூபாய்க்கான செக் வழங்கினார். ஆனால் அந்த செக் பவுன்ஸ் ஆனது, திட்டமிட்டு என்னை ஏமாற்றி உள்ளனர் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகார் தொடர்பாக, மகேஷை போலீசார் அழைத்த நிலையில், முன்ஜாமின் கேட்டு மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதன் மூலம் தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. மகேஷ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், 2015 ஆம் ஆண்டு வாங்கிய 4 கோடி ரூபாய் கடனுக்கு 4 கோடியே 5 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தி விட்டதாக கூறியுள்ளார்.
சென்னைக்கு அருகில் உள்ள தாளம்பூரில் உள்ள எனது அசையா சொத்துக்களை பிணையாக வைத்துதான் ஹர்பஜன் சிங்கிடம் பணம் பெற்றேன். இதற்காக திருப்போரூரில் உள்ள சார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். ஆவண எண் 3635/2015.
தன்னை கைது செய்ய போலீசார் முயற்சிப்பதாகவும், தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் எனக் கேட்டார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, மனுவின் விசாரணையை முடித்து வைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil