சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள 39 வயதான இம்ரான் தாகிர், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அளித்த பேட்டியில், "சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டது குறித்து ஒவ்வொரு நாளும், 'நான் எவ்வளவு அதிர்ஷ்டமானவன்' என்பதை நினைத்து நினைத்து மகிழ்கிறேன். இதுவரை நான் விளையாடிய எந்தவொரு அணியிலும் இப்படியொரு வரவேற்பை நான் பார்த்ததேயில்லை. இது முற்றிலும் மாறுபட்ட அணி. எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சொந்த மண்ணில் முதல் போட்டியில் விளையாடும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
நேர்மையாக சொல்ல வேண்டுமெனில், ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு டி20 போட்டிகள் மிக சவாலானது. ஆனால், அவர்கள் ஐபிஎல் மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
கிரிக்கெட் நிறைய மாறிவிட்டது. ஸ்பின்னர்களுக்கு இது கடினமான களமாக மாறியுள்ளது. நவீன கிரிக்கெட், பல வேரியேஷன்களில் பந்துவீசும் லெக் ஸ்பின்னர்களை தேடுகிறது.
வயது, ஒரு முக்கியமான காரணியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற தாகமும், நல்ல உடலமைப்பும் இருந்தால் நிச்சயம் சிறப்பாக கிரிக்கெட் ஆடலாம். பிராட் ஹாட்ஜ் மற்றும் பிராட் ஹாக் ஆகிய வீரர்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். அவர்களால் சாதிக்க முடிந்த போது, மற்றவர்களால் ஏன் முடியாது?. வயது என்னை எப்போதும் தடுத்து நிறுத்த முடியாது.
நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். நிச்சயம் சிறந்த பங்களிப்பை இந்த ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்துவோம்" என்றார்.