ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 74 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில், ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் பெய்ன் 73 ரன்கள் குவித்தார்.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 53 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இன்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 36 ரன்களில் சுருண்டது. அணியில் அனைத்து வீரர்களுகம் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாசில்வுட் 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
விராட்கோலி மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால், இந்த போட்டியுடன் அவர் நாடு திரும்புகிறார். இதனால் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"