ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில், இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இது இந்திய அணியின் இரண்டாவது ஆசிய கோப்பையாகும். இதற்கு முன், 2004-ஆம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. கடந்த 2009-க்கு பிறகு, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, ஷூட் அவுட் முறையில் சீனாவை 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. அரையிறுதிப் போட்டியில், 4-2 என நடப்பு சாம்பியன் ஜப்பானை இந்தியா வீழ்த்தியிருந்தது. அதேபோல், லீக் சுற்றில் சீனாவை 4-1 என இந்தியா தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில், நவ்ஜோத் கவுர் 25-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின், சீனாவின் டியாடெய்ன் 47-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது. இதையடுத்து, இரு அணிகளும் கோல் அடிக்கவே இல்லை. இதன்பின், ஷூட்அவுட்டில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது.
இத் தொடரில் இந்திய அணி, தான் விளையாடிய அனைத்துப் போட்டியிலும் வென்றுள்ளது. லீக் சுற்றில் மலேசியா, சிங்கப்பூர், சீனா ஆகிய அணிகளை இந்தியா வென்றது.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தான் இந்திய மகளிர் அணிக்கு ஹரேந்திர சிங் புதிய கோச்சாக நியமிக்கப்பட்டு இருந்தார். 2018-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு இந்திய அணி ஏற்கனவே தகுதிப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.