இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 35.4 ஓவரில் 188 ரன்களில் சுரண்டது. வெ்றி இலக்கான 189 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது
இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இந்தப்போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார். ரோகித் ஷர்மா போட்டியில் இல்லை என்பதால் சுப்மன் கில்லுடன், இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படுவர்.
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் கிரிகெட்டில் இதுவரை 143 ஆட்டங்களில் மோதி உள்ளனர். இதில் 80 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் 53 போட்டிகளில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகள் சமனில் முடிந்துள்ளது.
இந்தியாவில், பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா நேரடியாக ஒரு நாள் போட்டியில் விளையாடுவது இது 11, வது முறை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில், தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்மித் மற்றொ தொடக்க ஆட்டக்காரர் மீச்செல் மார்ஷூடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்க்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில், கேப்டன் ஸ்மித் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்கஸ் லபுசேசன் 15 ரன்களுக்கும், ஜோஸ் இங்கில்ஸ் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட் சரிந்தாலும் மீச்செல் மார்ஷ் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் ஆஸ்திரேலியா அணி 35.4 ஓவர்களில் 188 ரன்களில் சுருண்டது. மிச்செல் ஸ்டர்க் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஷமி, சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 189 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் சுப்மான் கில் இஷான் கிஷன் ஜோடி அதிர்ச்சி தொடக்கம் தந்தது. இஷான் கிஷன் 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். சற்று நேரம் தாக்குபிடித்த கில் 20 ரன்களும், அடுத்து வந்த விராட்கோலி 4 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் சொதப்பி வரும் சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை தூக்கி நிறுத்தும் பணியை கே.எல்.ராகுல் எடுத்துக்கொண்டார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹர்திக் பாண்டிய 25 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அரைசதம் கடந்த ராகுல் 75 ரன்களுடனும், ஜடேஜா 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் ஸ்டோயினிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் மார்ச் 19-ந் தேதி நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.