இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி தொடரை வென்றது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி சிட்னியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர் - பிஞ்ச் ஜோடி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் குவித்தனர். பிஞ்ச் 60 ரன்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, வார்னர் 83 ரன்களில் ரன் அவுட் ஆனார். 3வது வீரராக களம் இறங்கிய ஸ்மித் அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் 104 ரன்கள் குவித்து ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். எதிர்முனையில் உறுதியாக விளையாடிய லபுஸ்சேன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி வீரர்கள் வீசிய பந்துகளை சிதறடித்த மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 65 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 389- ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 63 ரன்களுடனும் ஹென்ட்ரிக்ஸ் 2 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் களம் இறங்கிய முதல் 5 வீரர்களும் அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்,ஷிகர் தவான் 30 ரன்களிலும் மயங்க் அகர்வால் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஸ்ரேயஸ் ஐயரும் விராட் கோலியும் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஆனால், ஹென்ரிக்ஸ் பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து வந்த கே.எல்.ராகுல், கோலியுடன் இணைந்து நிலைத்து விளையாடினார்கள். அரை சதம் அடித்த கோலி சதம் அடிப்பார் வெற்றி இலக்குக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹஸில்வுட் ஹென்ரிக்ஸ் இடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். மறு முனையில் உறுதியாக விளையாடிய கே.எல்.ராகுலும் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்குப் பிறகு வந்த ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முஹம்மது ஷமி 1 ரன்னிலும் பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும், ஆட்டமிழந்தனர். நவ்தீப் சைனி யுஸ்வேந்திர சாஹல் தலா 10 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தொடந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு நாள் போட்டி தொடரை வென்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.