இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டி, டூப்ளின் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 08.30 மணிக்கு நடைபெறுகிறது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று ஒருநாள், மூன்று டி20, மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடுகிறது. ஜூலை 3ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக, அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், 208 ரன்கள் குவித்த இந்திய அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது டி20 போட்டி, அதே டூப்ளின் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை, பயிற்சியின் போது கால்பந்து ஆடிய போது, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்தனர். இதனால், முதல் போட்டியில் ஆடிய பும்ரா, இன்று விளையாட மாட்டார் என தெரிகிறது.
அதேசமயம், கேப்டன் விராட் கோலி, 'மிடில் வரிசையில் நாங்கள் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்கப்போகிறோம். அடுத்து வரும் இங்கிலாந்தில் நடக்கும் 20 ஓவர் போட்டிகளிலும் இது தொடரும். பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டு ஏரியாவில் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்’ என்றார்.
எனவே, இன்றைய போட்டியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் ராகுல், சித்தார்த் கவுல், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இன்று ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.
Training ✅
It's match day and the boys look all set for the 2nd T20I against Ireland.#IREvIND pic.twitter.com/5Id8AECLtp
— BCCI (@BCCI) June 29, 2018
அயர்லாந்து அணியைப் பொறுத்தவரை, ஸ்பின் பவுலிங்கில் திணறுகிறார்கள். முதல் போட்டியில், குல்தீப் மற்றும் சாஹலிடம் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், இந்தய சுழற்பந்து வீச்சை சமாளிப்பது அவர்களுக்கு நிச்சயம் கடினம் தான். அதுமட்டுமின்றி, கடந்த போட்டியில் இரண்டு கேட்ச் வாய்ப்புகளையும் கோட்டை விட்டனர். ஃபீல்டிங்கில் அதிக கவனம் தேவை. இருப்பினும், கேரி வில்சன் தலைமையிலான அயர்லாந்து, எப்படியாவது இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்துவிட வேண்டும் என்கிற வேட்கையோடு, உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் மீண்டும் இன்று களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். சிறு அணியாக இருந்தாலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை.
ஏன்னா... கிரிக்கெட்டா இருந்தாலும் சரி... ஃபுட்பாலா இருந்தாலும் சரி... இப்போதெல்லாம் சிறிய அணிகள் தான் மிரட்டுகின்றன!.
இந்தியா-அயர்லாந்து 2-வது டி 20 ரிசல்ட்:
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 213 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 70 ரன்களும், சுரேஷ் ரெய்னா 69 ரன்களும் எடுத்தனர். கடைசி நேர அதிரடியாக ஹர்திக் பாண்ட்யா 9 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். அடுத்து பேட் செய்த அயர்லாந்து 13-வது ஓவரில் 70 ரன்களில் சுருண்டது.
டி 20 வரலாற்றில் இந்தியாவின் பெரிய வெற்றி இது. மேலும் அடுத்தடுத்து முதல் முறையாக இரு போட்டிகளில் 200 ரன்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது இந்தியா. இதன் மூலம் அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகளையும் வென்று 2-0 என முழுமையாக தொடரை கைப்பற்றியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.