தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, டுவென்டி20 தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி, மழையின் காரணமாக தடைபட்டது. 3வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றதால், தொடர் சமனில் முடிந்தது.
இதையடுத்து நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணி, 3வது போட்டியையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. 3வது போட்டி ராஞ்சியில் இன்று ( 19ம் தேதி) துவங்கியது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், நடப்பு தொடரில் தடுமாறிய உலகின் No.2 டெஸ்ட் பவுலர் காகிசோ ரபாடா, இப்போட்டியில் தனது ரிதமை கண்டறிந்தார்.
ரபாடா ஓவரில் தொடக்க வீரர் மாயங்க், 10 ரன்களில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, புஜாராவை பூஜ்யத்தில் எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார். இந்திய டக் அவுட் சற்று ஆட்டம் கண்டு போனது.
தொடர்ந்து, கேப்டன் கோலியை 12 ரன்களில் அன்ரிச் நோர்ட்ஜே ஓவரில் எல்பி ஆகி வெளியேற, 39-3 என்று தடுமாறிப் போனது இந்தியா. ஆனால், ஆச்சர்யம் அளிக்கும் வகையில் மீண்டும் ஒருமுறை சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா, சதம் அடித்து தென்னாப்பிரிக்காவின் பாஸிட்டிவ் எண்ணங்களை சுக்கு நூறாக்கினார்.
அதற்கு பக்கபலமாக தனது நேட்டிவிட்டி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே, அரைசதம் அடித்து ஆர்ம்ஸ் காட்ட மேற்கொண்டு விக்கெட் விழாமல் இந்தியா அபாரம் காட்டியது.
ஆனால், போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் 58 ஓவர்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது இந்தியா எடுத்திருந்த ஸ்கோர் 224/3.
ரோஹித் 117(164) ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.