இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் மழையால் தாமதம் ஆகிறது. ‘டாஸ்’ கூட போடவிடாதபடி, கொல்கத்தாவில் காலையில் இருந்து மழைத்தூறல் ‘விளையாடுகிறது’.
இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 3 டி-20 போட்டிகளில் பங்கேற்க இந்தியா வந்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று (16-ம் தேதி) கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஏற்கனவே கொல்கத்தா வந்து சேர்ந்தனர்.
கடந்த ஓரிரு தினங்களாக கொல்கத்தாவின் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நேற்று இரு அணி வீரர்களும் பயிற்சி செய்ய முடியவில்லை. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் வருகிற 18-ம் தேதி வரை அங்கு மழை இருக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இன்று காலை 8.30 மணியில் இருந்தே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதான பகுதியில் மழை தூறியது. எனவே காலை 9.30 மணிக்கு தொடங்கவேண்டிய டெஸ்ட் போட்டி உரிய நேரத்தில் தொடங்கவில்லை. ‘டாஸ்’ கூட போடாமல் இரு அணி வீரர்களும், நடுவர்களும் காத்திருக்கிறார்கள்.
இடையில் சிறிது நேரம் தூறல் நின்றது. ஆனால் மீண்டும் தூறியதால் மைதானத்தின் வெளிப்பகுதி ஈரமாக இருக்கிறது. எனவே உணவு இடைவேளைக்கு பிறகு போட்டி நடக்கலாம் என தெரிகிறது. எனினும் அடுத்த இரு தினங்களுக்கும் இங்கு மழை வாய்ப்பு இருப்பதால், கிரிக்கெட் ரசனைக்கு பெயர்போன கொல்கத்தா ரசிகர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை என்றே தோன்றுகிறது.