ipl 2020 mi vs kxip review : ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி டாக், ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோஹித் சர்மா 70 ரன்களும், அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 30 ரன்களும், கீரன் பொலார்டு 47 ரன்களும் குவித்ததன் மூலம் 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 191 ரன்கள் எடுத்தது.
கடைசி 5 ஓவர்களில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணி 89 ரன்கள் குவித்தது. கோட்ரெல் மட்டுமே சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்தார். நீஷம் 52, கௌதம் 45 ரன்கள் வாரி இறைத்தனர். மூன்று ஓவர்கள் கட்டுக்கோப்பாக வீசிய ஷமியின் கடைசி ஓவரிலும் கூட 19 ரன்கள் குவித்தது மும்பை.இதன் மூலம் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான மாயன்க் அகர்வால் 25 ரன்களும், கே.எல் ராகுல் 17 ரன்களும் எடுத்து கொடுத்து சுமாரான துவக்கம் கொடுத்தனர். நிக்கோலஸ் பூரனை (44) தவிர மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பும்ராஹ், ராகுல் சாஹர் மற்றும் பட்டின்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil