முன்னாள் பளுதூக்கும் வீராங்கனை கவிதா தேவி, இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், 'தி கிரேட் காளி' மற்றும் ஜிந்தர் மஹல் ஆகியோருக்குப் பிறகு, மல்யுத்த ரிங்கில் இந்தியாவின் கொடியை பறக்க விடும் பெருமையைப் பெற்றுள்ளார் கவிதா. டிசம்பர் 8 மற்றும் 9-ஆம் தேதி இந்தியாவில் நடக்கவுள்ள WWE போட்டிகளை விளம்பரம் செய்ய வந்த ஜிந்தர் மஹல் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, பஞ்சாபில் உள்ள தி கிரேட் காளியின் பயிற்சி மையத்தில், காளியிடமே நேரடியாகப் பயிற்சி பெற்றுள்ளார். இவர் தற்போது, Mae Young Classic women’s மல்யுத்த தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால், இந்தியாவின் சார்பில் மல்யுத்தத்தில் பங்கேற்கும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெறுகிறார். முன்னதாக, துபாயில் நடைபெற்ற மல்யுத்த பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்தைச் சேர்ந்த டகோடா கய் எனும் வீராங்கனையிடம் கவிதா தோல்வி அடைந்தார். இருப்பினும், அவர் மல்யுத்த போட்டிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக, வரும் ஜனவரி மாதம் ஃப்ளோரிடா மாகாணம் ஒர்லாண்டோவில் உள்ள மல்யுத்த பயிற்சி மையத்தில் தனது பயிற்சிகளை கவிதா தொடங்கவுள்ளார்.
இதுகுறித்து கவிதா தேவி அளித்துள்ள பேட்டியில், "பல சிறந்த மல்யுத்த வீராங்கனைகளுடன் Mae Young Classic தொடரில் பங்கேற்பது நிச்சயம் எனக்கு நல்ல படிப்பினையை கொடுக்கும். இந்தியாவுக்காக மல்யுத்தத்தில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையாக வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றுவதை எதிர்நோக்கி இப்போது காத்திருக்கிறேன்" என்றார்.
இதுகுறித்து ஜிந்தர் மஹல் கூறுகையில், "இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த சூப்பர்ஸ்டாராகும் அருமையான வாய்ப்பை பெற்றிருக்கும் கவிதாவை, நான் பெருமையுடன் வரவேற்கிறேன்" என்றார்.