Advertisment

என்னை 'ஒசாமா' என்றனர்; ஆஸ்திரேலியர்கள் மீது இரக்கம் கூடாது! - மொயீன் அலி வேதனை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மொயீன் அலி

மொயீன் அலி

ஆசைத் தம்பி

Advertisment

2014 நவம்பர் மாதம், சக வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து அடிப்பட்டு இறந்தற்காக, கேப்டன் மைக்கேல் கிளார்க், செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார். அதன் பின் நான்கு வருடங்கள் கழித்து, மீண்டும் ஒரு ஆஸ்திரேலிய கேப்டன் செய்திளார்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார் என்றால் அது ஸ்டீவ் ஸ்மித் தான். ஆனால், இம்முறை இறந்தது வீரர் அல்ல… ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீதான கெளரவம். ஒட்டுமொத்த கிரிக்கெட் மீதான நம்பிக்கை!.

கேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், தான் மறைத்து வைத்திருந்த மர்மப் பொருள் கொண்டு, ஆஸ்திரேலிய பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்றார் போல் பந்தை சேதப்படுத்தினர். இதை அப்படியே கேமரா படம் பிடிக்க, “What the f*** is going on? Find out what the f*** is going on?” என்று பயிற்சியாளர் லீமன் ஆத்திரப்பட, போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளானர்கள்.

அதன்பின், துணை கேப்டன் வார்னரின் ஐடியாவோடு, கேப்டன் ஸ்மித்தின் துணையோடு பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது உறுதியானது. ஸ்மித்துக்கும், வார்னருக்கும் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்க, சீனியர்கள் தவறு செய்ய சொன்னதை ஒப்புக்கொண்டு செய்த இளம் வீரர் பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

ஒரு நல்ல கேப்டனின் தவறான முடிவு, எத்தனை பேரின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறது என்பதற்கு ஸ்டீவன் ஸ்மித் தான் ஆகச் சிறந்த உதாரணம். போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக, குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து, ஒரு இளம் வீரரை ஊக்கப்படுத்தி பந்தை சேதப்படுத்த வைத்து, செய்தியாளர்கள் முன்பு, வெட்கி தலை குனிந்து அழ வேண்டியதாகிவிட்டது.

இருந்தாலும், இப்போது ரசிகர்களுக்கு அவர்கள் மீதான கோபம் குறைந்துள்ளது. கனடா டி20 லீக்கில் ஸ்மித் மற்றும் வார்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது, ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனால் இருவரும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஆனால், இவ்விரு வீரர்கள் குறித்தும், ஆஸ்திரேலியா வீரர்கள் குறித்தும் மீண்டும் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயீன் அலி.

இங்கிலாந்து அணி கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்று ஆஷஸ் தொடரில் விளையாடியபோது மொயீன் அலி அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது மொயீன் அலி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பினார். இதனால் இந்தியாவிற்கு எதிரான முதல் மூன்று டெஸ்டிலும் அவர் இடம்பெறவில்லை.

கவுன்ட்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சவுத்தாம்ப்டன் டெஸ்டில் களம் இறக்கப்பட்டார். இதில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணி தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில், மூர்க்கத்தானமாக செயல்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்களுக்காக அனுதாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மொயீன் அலி தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிடுகையில், "நான் இதுவரை விளையாடிய உலக கிரிக்கெட் அணிகளிலேயே, விளையாட விரும்பாத ஒரே அணி எது என்றால், அது ஆஸ்திரேலியா மட்டும் தான். அவர்கள் எங்களது பழைய எதிரிதான். இருந்தாலும், அவர்கள் வீரர்களுக்கும் மக்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை.

கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன் முதன்முதலாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான் சிட்னியில் நடைபெற்ற ஆஷஸ் போட்டியில் விளையாடிய போது, அவர்கள் எனக்கு எதிராக கடினமாக மட்டும் நடந்து கொள்ளவில்லை. என்னை இழிவுப்படுத்தினார்கள். என்னை ஒசாமா என்று அழைத்தார்கள். அது என் காதுகளில் நன்றாக விழுந்தது. உடனே நான் எனது அணி நிர்வாகத்திடம் முறையிட, ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. ஆனால், அவரோ வீரர்கள் யாரும் அப்படி சொல்லவில்லை என்று மறுத்துவிட்டார். ஆனால், அவர்கள் என்னை அப்படி அழைத்தது உண்மை. அது என்னை முதன்முறையாக தாக்கியது.

தவறு செய்த மூன்று பேர் மீதும் சிலருக்கு அனுதாபம் ஏற்படலாம். ஆனால், அவர்களுக்காக வருத்தம் பட கடினமாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

தவறு செய்தாலும், ஸ்மித், வார்னர் மீது ரசிகர்களுக்கு இப்போது அனுதாபம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இங்கிலாந்தின் மொயீன் அலி மீண்டும் அவர்களை விமர்சித்து இருக்கிறார். இவரது விமர்சனத்திற்கு தற்போது பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தவறு செய்தால் திருந்துவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து அவர்கள் குத்திக் கொண்டே இருக்கக் கூடாது என ரசிகர்கள் மொயீன் அலிக்கு பதிலளித்து வருகின்றனர்.

ஆனால், நடப்பு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்னும், புதிய பயற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் கருத்துகள் மொயீன் அலியின் கோபத்தை நாம் நியாயமாக நினைக்கும் வகையில் அமைந்துள்ளது.

புதிய தலைமை பயிற்சியாளராக பதவியேற்றுக் கொண்ட போது, ஜஸ்டின் லாங்கர் சொன்னது இதுதான். “ஆஸ்திரேலியாவில் ஸ்லெட்ஜிங் என்பது ஒரு நல்ல விஷயமாகும். நான் எனது மகளுடன் சீட்டுக் கட்டு ஆடும் போது இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்வோம். அதேபோல், எனது பெற்றோருடன் கோல்ஃப் விளையாடும் போது அனைவரும் ஸ்லெட்ஜிங் செய்வோம்.

வேடிக்கையாக பேசுவதற்கும், தவறாக பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தவறாக பேசுவதற்கு யாருக்கும் எங்கும் இடமில்லை. ‘ஸ்லெட்ஜிங் ஆஸ்திரேலியர்கள்; என்று எங்களை கடந்த 30 வருடங்களாக மக்கள் எங்களை அழைக்கின்றனர். அதற்காக எல்லாம் நாங்கள் என்றுமே கவலைப்பட்டதில்லை” என்றார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் சொல்வது என்ன தெரியுமா?

“களத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எப்போதும் போல நாங்கள் பேசப் போகிறோம். எதிரணிக்கு அழுத்தம் கொடுப்போம். ஆனால், அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம். ஸ்டெம்ப்பில் இருக்கும் மைக் மூலம் நாங்கள் பேசுவதை (ஸ்லெட்ஜிங்) நீங்கள் கேட்கத் தான் போகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அப்போ மொயீன் அலி சொன்னது சரிதான் போல!.

England Australia David Warner Steve Smith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment