இந்திய கிரிக்கெட் அணி வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுமான தோனி, நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சந்தித்து பேச உள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு இந்தாண்டு ஐபிஎல் போட்டியை சிறந்ததாக மாற்றியுள்ளது. சென்னை அணி மீதுள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவே நமக்கான பலம். அனைத்து வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தும் சூழல் சென்னை அணிக்கு எப்போதும் உண்டு”, என கூறினார்.
மேலும், ”இரண்டு ஆண்டுகள் சென்னை அணி ஆடாவிட்டாலும், ரசிகர்களின் ஆதரவு கூடத்தான் செய்திருக்கிறது. சென்னை அணிக்காக 2 ஆண்டுகள் விளையாடாதது வருத்தம் அளித்தாலும், நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள முடிந்தது. விக்கெட் கீப்பராக இருப்பது அணியை வழிநடத்த உதவும். 18 முதல் 20 வீரர்களை அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அஸ்வினை அணியில் சேர்க்க முயல்வோம்”, எனவும் தோனி தெரிவித்தார்.
சென்னை தனக்கு இரண்டாவது வீடு எனவும் தோனி குறிப்பிட்டார்.