முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணி வங்கதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் நிடாஹஸ் டிராபி எனப்படும் முத்தரப்பு டி20 தொடர் கடந்த 6ம் தேதி கொழும்புவில் தொடங்கியது. இதில் முதல் போட்டியில், இலங்கையிடம் தோல்வியடைந்த ரோஹித் தலைமையிலான இந்திய அணி, இன்று இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா, வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தார். அந்த அணியின் தொடக்க வீரர்கள் தமிம் இக்பால் 15 ரன்னிலும், சௌமியா சர்கர் 14 ரன்னிலும் வெளியேறினர். லிட்டன் தாஸ் சற்று தாக்குப்பிடித்து 34 ரன் சேர்த்தார். மற்ற வீரர்களில் சபீர் ரஹ்மான் மட்டும் 30 ரன்கள் எடுத்தார். இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக உனட்கட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தமிழக வீரர் விஜய் ஷங்கர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், ஷிகர் தவான் 55 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் ஷர்மா 17 ரன்னில் வெளியேறினார். ரிஷப் பண்ட் 7 ரன்களும், சுரேஷ் ரெய்னா 28 ரன்களும், மனீஷ் பாண்டே 27 சேர்க்க இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வென்றது.