கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலியிறுதிப் போட்டியில் ஜப்பான் நாட்டு வீராங்கனை மினட்சு மிடானியை வீழ்த்தியதன் மூலம் பி.வி சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற இப்போட்டியில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி சிந்து, ஜப்பான் வீராங்கனை மினட்சு மிடானி எதிர்கொண்டார்.
முதல் செட்டில் மினட்சு மிடானி, பி.வி சிந்துவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். எனினும், 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை பி.வி சிந்து கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் 13-8 என்ற கணக்கில் பி.வி சிந்து முன்னிலையில் இருந்தபோதிலும், அந்த செட்டை 21-18 என்ற கணக்கில் மிதானி கைப்பற்றினார். முதல் இரண்டு செட்களிலும் சவாலை சந்தித்த பி.வி சிந்துக்கு 3-வது செட் எளிமையானதாக அமைந்தது. 3-வது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பி.வி சிந்து 21-10 என்ற கணக்கில் 3-து செட்டை கைப்பற்றி வெற்றி கண்டார்.
இதன் மூலம் 21-19 18-21 21-10 என்ற கணக்கில் மினட்சு மிடானியை வீழ்த்திய பி.வி சிந்து, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தாய்லாந்து வீராங்கனை ஜிந்தாபோலை 22-20 21-17 என்ற கணக்கில் பி.வி சிந்து வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.