ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடருக்கு பிறகு இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் டி20 தொடர் தொடங்குகிறது. இதில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குபெறும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வரும் அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை தேர்வுக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அஜின்க்யா ரஹானே, மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அணியில் இடம் பெற்றிருந்த உமேஷ் யாதவ், முகமது ஷமி, லோகேஷ் ராகுல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளது. வரும் அக்.,22-ஆம் தேதி மும்பையில் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டி 25-ஆம் தேதியும், மூன்றாவது போட்டி 29-ஆம் தேதியும் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து, முதல் டி20 போட்டி நவம்பர் 1-ஆம் தேதியும், நவம்பர் 4, 7-ல் அடுத்த இரண்டு டி20 போட்டிகளும் நடைபெற உள்ளது. மும்பை, புனே, டெல்லி, ராஜ்கோட், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.