Advertisment

அறிமுக ஆட்டத்தில் சதமடித்து அதிரடி… ரஞ்சி தொடரில் கலக்கும் இளம் இந்திய வீரர்!

U-19 World Cup-winning skipper Yash Dhull scored 113 on Day One against Tamil Nadu in Guwahati Tamil News: ரஞ்சி கோப்பை தொடருக்கான டெல்லி அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துள், தனது அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ranji Trophy Tamil News: India U-19 captain Yash Dhull slams ton on Ranji debut

Ranji Trophy Tamil News: 87-வது ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 9 நகரங்களில் நேற்று முதல் தொடங்கியது.1935-36-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடர் ‘இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு’ என்று வர்ணிக்கப்படுகிறது. மேலும், வருடந்தோறும் நடைபெறும் இந்த போட்டிகள், நாட்டில் நிலவிய கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

Advertisment

தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தொடரில் இடம் பெறும் போட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டும், கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டும் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் மார்ச் 15-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இரண்டாம் கட்டமாக நடக்கும் நாக்-அவுட் சுற்று போட்டிகள், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் முடிந்த பின்னர், மே 30-ந்தேதி முதல் ஜூன் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

எத்தனை அணிகள்? எந்தெந்த நகரங்கள்?

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட 9 நகரங்களில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் (பயோ பபுள்) உருவாக்கப்பட்டு நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்று உள்ளன. இந்த அணிகளில் 8 ‘எலைட்’ பிரிவில் தலா 4 அணிகளும், ‘பிளேட்’ பிரிவில் 6 அணிகளும் இடம் பிடித்துள்ளன. ‘எலைட்’ பிரிவில் உள்ள ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

'பிளேட்’ பிரிவில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள 3 அணிகளுடன் மட்டும் விளையாடும். லீக் சுற்று முடிவில் ‘எலைட்’ பிரிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இடங்களை பிடிக்கும் 8 அணிகளில் சிறந்த 7 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். எஞ்சிய ஒரு அணி, ‘பிளேட்’ குரூப்பில் முதலிடத்தை பெறும் அணியுடன் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் மோதும்.

டெல்லி - தமிழ்நாடு மோதல்

இந்நிலையில், 'எலைட்' எச் பிரிவில் இடம்பிடித்துள்ள டெல்லி - தமிழ்நாடு அணிகள் மோதும் ஆட்டம் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 452 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக லலித் யாதவ் 177 ரன்களும், தொடக்க வீரர் யாஷ் துள் 113 ரன்களும், ஜாண்டி சித்து 71 ரன்களும் குவித்தனர்.

தற்போது களமிறங்கி ஆடிவரும் தமிழ்நாடு அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் சேர்த்துள்ளது.

அறிமுக ஆட்டத்தில் சதமடித்த இளம் வீரர்

சமீபத்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் யாஷ் துள் ரஞ்சி கோப்பை தொடருக்கான டெல்லி அணியில் தொடக்க வீரராக இடம்பிடித்துள்ளார். நேற்றை ஆட்டத்தில் அறிமுகமான இவர் தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், 150 பந்துகளில் 18 பவுண்டரிகளை விரட்டி தனது முதல் ரஞ்சி தொடர் சதத்தையும் பதிவு செய்தார்.

இப்போட்டிக்கு பிறகு பேசிய யாஷ் துள், "கடந்த 2-3 வாரங்களாக அற்புதமான நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நடந்துள்ளன. இவையனைத்தும் மிகப்பெரிய விஷயங்கள். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும். நான் அதற்கு பழகிக்கொள்வேன்.

அடித்து ஆடுவது தான் எனது இயல்பான விளையாட்டு. ஆனால், அதற்கு சரியான நேரம் அமைய வேண்டும். மேலும், நீங்கள் உங்களை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்." என்று கூறியுள்ளார்.

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி யாஷ் துளை 50 லட்ச ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஃ பார்மிற்கு திரும்பிய ரஹானே

நேற்று தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில், 'எலைட்' டி பிரிவில் இடம்பிடித்துள்ள சௌராஷ்டிரா - மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 233 ரன்களும், அஜிங்க்யா ரஹானே 129 ரன்களும் குவித்தனர். தற்போது 6 விக்கெட்டுகளை இழந்துள்ள அந்த அணி 451 ரன்களை சேர்த்துள்ளது.

மும்பை அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்த போது களமிறங்கிய மிடில்-ஆடர் பேட்ஸ்மேன் அஜிங்க்யா ரஹானே அணியை விக்கெட் சரிவில் இருந்து மீட்டார். மேலும், பின்னர் வந்த சர்பராஸ் கானுடன் ஜோடி சேர்ந்த அவர் சதம் அடித்து அசத்தினார். மேலும், 290 பந்துகளில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளை விளாசிய இருந்த அவர் 129 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

publive-image

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற அணியை கேப்டனாக வழிநடத்தி இருந்த ரஹானே, சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் மிகுந்த பின்னடைவை சந்திருந்தார். கடந்தாண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 479 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 20.82 ஆக உள்ளது. இதனால் அவரிடம் இருந்த இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவரின் ஷாட் தேர்வு செய்யும் முறையும் பெரிதும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரஞ்சி கோப்பை தொடரில் ரஹானே தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் அவர் தனது முந்தைய ஃபார்மிற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Delhi Sports Cricket Indian Cricket Ranji Trophy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment