இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் தீவிரமாக உள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிகளில் பங்காற்ற வந்த பல வெளிநாட்டு வீரர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்கின்றனர். ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரரான ஆண்ட்ரூ டை தொடரில் இருந்து விலகினார் .இதனை தொடர்ந்து ஆர்.சி.பி. அணியில் இடம் பெற்றிருந்த ஆடம் ஜாம்பாவும் தொடரில் இருந்து வெளியேறினார்.
சிட்னி மார்னிங் ஹெரால்டு இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் பையோ பபுள் எனப்படும் பாதுகாப்பு வளையம் மிகவும் நன்றாக இருந்தது. இந்தியாவில் அந்த பாதுகாப்பு வளையம் மிகவும் பலவீனமாக உள்ளது. மேலும் இந்தியாவில் சுகாதாரம் பற்றி எப்போதுமே நாங்கள் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளோம். இந்த சுகாதார சீர்கேடு காரணமாக நாங்கள் மேலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
விளையாட சென்றால் எனக்கு சூழல் குறித்த அச்சமே நிலவுகிறது தவிர விளையாட எனக்கு உத்வேகமே வரவில்லை. இந்தியாவில் தான் இந்த ஆண்டு டி20 உலக கோப்பையும் நடைபெற உள்ளது. ஆனால் 6 மாதத்திற்குள் நிலைமை சரியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நான் அமீரகத்தில் தான் இம்முறையும் போட்டிகள் நடைபெறும் என்று நினைத்தேன். ஆனால் இங்கு பல அரசியல் நடந்திருப்பதாக உணருகிறேன் என்றார். கிரிக்கெட் மன அழுத்தத்தை குறைக்கும் என்று பலரும் கூறுகிறார்கள். அது பலரின் தனிப்பட்ட கருத்தாகும். ஆனால் தங்களின் குடும்பத்தில் ஒருவர் மரணமடையும் தருவாயில் இருக்கும் போது கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் தருவார்களா என்று கேள்வி எழுப்பினார் அவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil