தலைப்பை பார்த்தவுடன் 'போங்க தம்பி.. போய் புள்ள குட்டிய படிக்க வைங்க-னு' நினைக்குற உங்க மைண்ட் வாய்சை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதை சாதித்து காட்டியிருக்கிறார் 20 வயதான இளம் புயல், இளம் சூறாவளி, இளம் சுனாமி... இவ்ளோ ரன்கள் அடித்தவரை நாம் எப்படித் தான் அழைப்பது!.
தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள நார்த்வெஸ்ட் யுனிவர்சிடி புக்கே அணிக்கும், போட்ச் டார்ப் அணிக்கும் இடையே நேற்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய நார்த்வெஸ்ட் அணியின் ஷேன் டேட்ஸ்வெல் என்ற அந்த வீரர், 151 பந்துகளில் 57 சிக்சர்கள் மற்றும் 27 பவுண்டரிகளுடன் 490 ரன்கள் விளாசினார். அடித்தால் அடி, மிதித்தால் மிதி, இடித்தால் இடி என்பது போல அனைத்து பவுலர்களையும் துவம்சம் செய்துவிட்டார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 677 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 678 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய போட்ச் டார்ப் அணியினரால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் புக்கே அணி 387 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பவுலிங்கிலும் அசத்திய டேட்ஸ்வெல், 7 ஓவர் பந்து வீசி 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடிய ஷேன் டேட்ஸ்வெல் நேற்று தனது 20-வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்த ஷேன் டேட்ஸ்வெல்லுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஒரு டி வில்லியர்ஸ்க்கே நாடு தாங்காது.. 10 டி வில்லியர்ஸ் ஒண்ணா சேர்ந்து வந்தா என்னப்பா பண்றது!.