ஐ.பி.எல்.: 25 % பேர் நேரில் காண மகாராஷ்டிரா அனுமதி
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது.
அணிகள் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் 5 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
ஐ.பி.எல். அணிகள் வருகிற 14 அல்லது 15-ந் தேதியில் இருந்து பயிற்சியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்க்க கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 25 சதவீத ரசிகர்களை அனுமதிக்க மகாராஷ்டிர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கொரோனா மீதான கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகள் தொடர்ந்து தளர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: நாளை தொடக்கம்
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்குகிறது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி 1973-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2017-ஆம் ஆண்டு சொந்த நாட்டில் நடந்த உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.
கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை அரங்கேறுகிறது.
இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
முதல் டெஸ்ட் : இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே நடந்த டி20 போட்டியில் 3-0 என இந்திய அணி தொடரை வென்றது .
இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் வீரர்களான பிரியங்க் பஞ்சால், கே.எஸ் பாரத், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் உள்ளனர். மூத்த வீரர்களான ரகானே, புஜாரா, விருத்திமான் சாஹா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது
துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு தடை
துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் ரஷ்ய வீரர்களுக்கு தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷ்யா மற்றும் அதற்கு ஆதரவாக செயல்படும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகளை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என்று அனைத்து விளையாட்டு சம்மேளனங்களுக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வேண்டுகோள் விடுத்து இருந்தது.
இதை ஏற்று சர்வதேச விளையாட்டு சம்மேளனங்கள் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கால்பந்து, உலக தடகளம், ஐஸ் ஸ்கேட்டிங் உள்ளிட்ட போட்டிகளில் விளையாட அந்த நாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரஷியா, பெலாரஸ் வீரர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் நேற்று அறிவித்தது.
20 ஓவர் தரவரிசையில் டாப் 20 இடத்தில் ஸ்ரேயஸ் ஐயர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் 27 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ரஷ்ய – உக்ரைன் போர்: தாய் நாட்டிற்காக ஆயுதம் ஏந்தும் விளையாட்டு வீரர்கள்!
இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் அரை சதம் அடித்ததால் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. இலங்கை 20 ஓவர் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு எடுத்ததால் அது அவரது தரவரிசையிலும் எதிரொலித்து இருக்கிறது.
அவர் 5 இடங்கள் சரிந்து 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதே போல் இந்தியாவின் லோகேஷ் ராகுல் 4 இடம் குறைந்து 10-வது இடத்துக்கு பின்தங்கினார். ரோகித் சர்மா 13-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடர்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.