ஆஸ்திரேலிய பெண் அளித்த பாலியல் வன்புணர்வு புகாரின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக (Danushka Gunathilaka) சிட்னியில் இன்று (நவ.6) கைது செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இலங்கை அணியில் இருந்தவர் தனுஷ்க குணதிலக்க. இவர் மீது நவ.2ஆம் தேதி ஆஸ்திரேலிய பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.
அந்தப் பாலியல் வன்புணர்வு புகாரில் நவ.2ஆம் தேதி இருவரும் சந்தித்ததாகவும் அப்போது தன்னை குணதிலக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்தப் புகாரில், “இருவரும் டேட்டிங் ஆப் மூலமாக பல நாள்களாக பேசிவந்தோம். இந்த நிலையில் நவ.2ஆம் தேதி சந்தித்துப் பேசுகையில் அவர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார் எனத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சிட்னி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலீசார் தனுஷ்க குணதிலகவை அதிரடியாக கைதுசெய்து சிட்னி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் பாலியல் வன்புணர்வு புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், குணதிலக மீதான புகாிரல் விசாரணை நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியமும் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோற்று வெளியேறிவிட்டது. இதற்கிடையில் அந்த அணியின் கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் வன்புணர்வு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil