இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி அற்புதமான நபர் என்றும், தாங்கள் இருவருமே களத்தில் ஆடும்போது கடுமையாக இருப்போம் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார்.
இதுகுறித்து, சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டீவ் ஸ்மித், "களத்துக்கு வெளியே நான் அவரிடம் ஒரு சில சமயம் பேசியிருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான நபர். நாங்கள் இருவரும் எங்களின் அணிகளுக்காக களத்தில் கடுமையாக ஆடுபவர்கள். அது ஆட்டத்தின் ஒரு பகுதியே.
எல்லை விவகாரம்: ஐபிஎல் தொடரில் சீன நிறுவன ஸ்பான்சர்ஷிப் குறித்து மறுஆய்வு!
உலகக் கோப்பை ஆட்டத்தின் போது என்னையும், டேவிட் வார்னரையும் கிண்டல் செய்த இந்திய ரசிகர்களை அமைதி காக்கும்படி விராட் சொன்னதற்கு நான் அன்றே அவரிடம் நன்றி பாராட்டிப் பேசினேன். இந்திய அணியை அவர் நடத்தி வரும் விதம் அற்புதமாக இருக்கிறது.
அவரது பேட்டிங் திறமையும் அசாத்தியமானது. மூன்று விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் அவர் மிகத் திறமையானவர். வரும் காலங்களில் அவர் பல சாதனைகளை முறியடிக்கப்போவதை நாம் பார்ப்போம். அவருக்கு ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற பசி இருக்கிறது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதை சேர்க்க முடியாது என்று நம்புகிறேன். அப்படி நடந்தால் நன்றாக இருக்கும்.
ஒரு கேப்டனாக இந்தியாவை டெஸ்ட் உலகில் முதலிடம் பிடிக்கச் செய்தார். அவர் ஆரோக்கியத்துக்கு அதிக கவனம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. இந்தியா அற்புதமான அணி. இந்த வருடம் அவர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வருவது விசேஷமானதாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று ஸ்மித் கூறியுள்ளார்.
இந்திய அணி அக்டோபர் மாதத்திலிருந்து ஜனவரி வரை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இதில் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன.
பொதுவாக, முக்கியமான கிரிக்கெட் தொடர் தொடங்கும் காலத்தில், ஆஸ்திரேலிய அணி குறிப்பிட்ட அணிகளுக்கு எதிராக, சில குறிப்பிட்ட ஸ்டிராடஜியை பயன்படுத்தும். மனரீதியாக எதிரணியை நோக்கி அந்த ஸ்டிராடஜியை பயன்படுத்தும்.
அதாவது, தொடர் ஆரம்பிக்கும் முன்னரே, எதிரணியின் டாப் வீரரின் திறமையை பட்டும் படாமல் கிண்டல் செய்து அவரை சீண்டுவது, எதிரணியின் பலத்தையே கேலிக்குள்ளாக்குவது என்று எதையாவது செய்வார்கள்.
ஐபிஎல் சாத்தியமே - விளம்பரதாரர்களின் வேகமும், விவேகமும்
இவை எதற்கும் எதிரணி மசியாது என்று தெரிந்தால், குறிப்பிட்ட வீரரையோ அல்லது அணியையோ உயர்த்திப் பேசி,அவர்களின் ஆக்ரோஷத்தை தொடருக்கு முன்னதாகவே குறைத்துவிடுவார்கள்.
எது எப்படியோ... தொடருக்குள் எதிரணி காலடி எடுத்து வைக்கும் போது, ஒன்று அவர்கள் அதீத கோபத்தில் ஏகப்பட்ட தவறுகளை செய்து தோற்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் ஆக்ரோஷம் குறைக்கப்பட்டு அடி வாங்க வேண்டும். இதுதான், காலங்காலமாக ஆஸி., கையாண்டு வரும் ஃபார்முலா.
கோலியை புகழ்ந்திருக்கும் ஸ்மித்தின் ஸ்டிராடஜி இதில் எந்த வகை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.