தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று அசத்தினார். திருச்சி மாவட்டம் முடிகண்டத்தை சேர்ந்த கோமதி, தன் வாழ்வில் பல தடைகளைத் தாண்டி இந்த சாதனையை நிகழ்த்தினார்.
கோமதி தங்கம் வென்றதும், முதல் ஆளாக அவருக்கு பரிசுத் தொகை அறிவித்தது காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் தான். சொன்னது போல், சென்னை வந்த கோமதியை நேரில் சந்தித்து 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, அமமுக சார்பில் 10 லட்ச ரூபாய், திமுக 10 லட்ச ரூபாய், தமிழக காங்கிரஸ் சார்பில் 5 லட்ச ரூபாய், அதிமுக 15 லட்ச ரூபாய் என அரசியல் கட்சிகளும் கோமதிக்கு நிதியுதவி அளித்துள்ளன.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றம் மூலம், ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கோமதி மாரிமுத்துவுக்கு அளித்துள்ளார்.
தங்கம் வென்ற இந்த தமிழக மங்கைக்கு நிதியுதவி அளிப்பது நல்ல விஷயம் என்றாலும், அவருக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.