கரூர் உள்பட 10 இடங்களில் ஏற்றுமதி வழிகாட்டுதல் மையம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் கடந்த சனிக்கிழமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 13ஆவது ஆண்டு மாநாடு கரூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், "கரூர், திருப்பூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோயம்புத்தூர், ஓசூர் உள்ளிட்ட 10 இடங்களில் ஏற்றுமதி வழிகாட்டுதல் மையம் அமைக்கப்படும். இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும்
தேவைகள் குறித்து தகவல்களைப் பெறலாம்.
வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் பெறுவது குறித்தும் தகவல் பெறலாம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதியின் பங்கை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் ஏற்றுமதி பங்கு தற்போது 9.25% ஆக உள்ளது" என்றார்.
புஞ்சைக்கள்ளக்குறிச்சியில் உள்ள ஜவுளி தொழிற்பேட்டையில் 16 நிறுவனங்கள் தங்கள் யூனிட்களை
நிறுவியுள்ளன. 100 கடைகளில் 84 கடைகள் இன்னும் விற்கப்படவில்லை. ஜவுளி துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாது மற்ற துறை தொழில்முனைவோருக்கும் கடைகள் விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்," மாநிலத்தின் வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் தடையின்றி மின்சாரம் வழங்க அரசு பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று கூறினார்.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு செயலாளர் மகேஸ்வரி, சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் சத்தியகம் ஆர்யா,
நிர்வாக இயக்குநர் ரமேஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil