அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த மாதம் ஜூன் 16-ம் தேதி வெளியிட்டது.
இந்த அறிவிப்பில், பொறியியல் பாடங்களுக்கான விரிவுரையாளர் பணிக்குப் பொறியியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், பொறியியல் அல்லாத பிரிவுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. விண்ணப்பிக்க கடைசிநாள் 07.07.2017 என்றும், எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. இதையடுத்து, விண்ணப்பங்கள் தொடர்ந்து பெறப்பட்டு வந்தன.
இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், "பாலிடெக்னிக் பணியிடங்கள் நிரப்ப பி.இ. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், நான் இன்ஜினியரிங் படிப்பை இரண்டாம் வகுப்பிலும், முதுநிலை பொறியியல் படிப்பில் ஃபர்ஸ்ட் கிளாசில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
இதனால், என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு எதிராக உள்ளது. எனவே விரிவுரையாளர் தேர்வுக்கான அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்' என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிகளைப் பின்பற்றி, புதிய அரசாணை வெளியிட்டு அதனடிப்படையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வை நடத்த வேண்டும்' என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.