பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், தமிழக அரசு, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அரசானை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் பொது முடக்க அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதே போல, மாதம் 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-1 தேர்வு வருகிற ஜூன் 16-ந்தேதியும், மார்ச் 24-ந்தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இயலாதவர்களுக்கு ஜூன் 18-ம் தேதியும் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சார்பில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவித்திருப்பதாவது: “பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அனுப்பபடுவார்கள்.
அப்படி வீட்டிற்கு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத்தேர்வில் தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம்.
காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
மாணவர்களுக்கு காலையிலும் மாலையிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை பதிவேட்டில் எழுத வேண்டும்.
மாணவர்களுக்கு அளவுக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும்.” என்று வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.