மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 13.50 லட்சம் ரொக்கப் பணம், 11 கிலோ தங்கம், 15.25 கிலோ சந்தன மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள், நான்கு கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகிய்வற்றை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பின்னர் வெங்கடாசலத்திற்கு சொந்தமான ஐந்து இடங்களில் வியாழக்கிழமை அன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை கிண்டில் அமைந்துள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது.
தன்னுடைய அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்ததோடு மட்டும் அல்லாமல் மற்ற அதிகாரிகளுடன் இணைந்து குற்றவியல் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசிற்கு இழப்பை ஏற்படுத்தினார் என்று டி.வி.ஏ.சி. வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்தனக்கட்டைகளால் ஆன பொருட்கள் அவருடைய இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதால் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத்துறையினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : முறைகேடு புகார்: மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரெய்டு
உத்தரவுகளைச் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்காதது, சுற்றுச்சூழல் மீறல்களுக்கு எதிராக கீழ்நிலை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதைத் தடுத்தல், ஆட்சேர்ப்புகளில் முறைகேடுகள் செய்தல் மற்றும் பொருட்களை வாங்குவதில் உறவினர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்களையும் அவர் மேற்கொண்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சேலம் மாவட்டம் அம்மம்பாளையம் தேரடி தெருவை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். 1988ம் ஆண்டு வனப்பாதுகாவலராக பணியில் சேர்ந்தார். பிறகு பதவி உயர்வு அடைந்து வனத்துறை அதிகாரியாக தமிழகம் முழுவதும் பணியாற்றியுள்ளார். 2018ம் ஆண்டு அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர், 2019ம் ஆண்டு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil