கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 3 லட்சம் கனஅடி நீர் செல்வதால் அணைக்கரை பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதாலும், கர்நாடக அணைகள் நிரம்பி அதன் உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்படுவதாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் அமராவதி ஆறு மூலம் காவிரியில் கலந்து வருவதால் கடந்த நான்கு தினங்களாக அதிகளவு தண்ணீர் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் சுமார் 3 லட்சம் கனஅடி தண்ணீர் செல்கிறது. இதனால் அணைக்கரை பாலத்தின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பேருந்து, லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் 150 முதலைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வனத்துறை பராமரிப்பில் இருந்த 150 முதலைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.