வரும் சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியிலேயே பி ஜே பி தொடரும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்தார்.
இன்று பெரம்பலூர்) மற்றும் அரியலூர் மாவட்டத்தில் 'விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியிலேயே பி ஜே பி தொடரும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம், 2021 சட்ட மன்ற தேர்தலுக்கான கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என அதிமுக தலைமைக் கழகம் ஒருமனதாக அறிவித்தது. மேலும், அமித் ஷாவின் தமிழக வருகையின் போது தமிழக அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், சட்டமன்றத் தேர்தலில், அதிமுக- பாஜக கூட்டணித்தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தனர் .
எனவே, இந்த சூழலில் முதல்வர் வேட்பாளர் குறித்த எல். முருகனின் கருத்து மிகுந்த சர்ச்சையாக உருவெடுத்தது.
முருகனின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம், “ தற்போதுள்ள கூட்டணியியே தொடரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதிமுக, தனது முதல்வர் வேட்பாளரை முன்னரே அறிவித்து விட்டது. எனவே, தற்போது எல். முருகன் கூறிய கருத்து ஏற்கத்தக்கதல்ல" என்று தெரிவித்தார்.
பாஜகவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் எம். பி அன்வர் ராஜா, "தற்போதுள்ள கூட்டணி தொடர் வேண்டும் என்றால், அதிமுக முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்காத பட்சத்தில் கூட்டணியில் தொடர இயலாது. பாஜக தனித்துதான் போட்டியிட வேண்டும் "என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தான் சேலத்தில் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.