Advertisment

நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anna University

Anna University

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்கனை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் தர்னீஷ்குமார், சாய் சச்சின் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று வரை நடைபெறாமல் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதில், "மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் அனுப்பிய பரிந்துரையை ஏற்று தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு, கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் கூறி இருக்கிறது. அப்படி கொள்கை முடிவு எடுத்திருந்தால், தமிழக அமைச்சரவையில் தான் எடுத்திருக்க வேண்டும். கொள்கை முடிவை மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் எடுக்க முடியாது. அவ்வாறு கொள்கை முடிவை எடுக்க அவருக்கு அதிகாரமும் கிடையாது.

மேலும், மாணவர்கள் அனைவரையும் ஒரே விதமாக கருதவேண்டும். பாடதிட்டங்களின் அடிப்படையில், மாணவர்களை பிரித்து பார்க்கக் கூடாது. மருத்துவ படிப்பில் மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், தன்னிச்சையாகவும் உள்ளது. எனவே அந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, அரசாணையை ரத்து செய்த தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இரு நீதிபதிகள் முன்னிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் 31-ம் தேதி வழங்கப்பட்டது. அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்பட்டது. அத்துடன் அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், காலம் தாழ்த்தாமல் கலந்தாய்வை நடத்துமாறும் அரசுக்கு அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது. அதில், நீட் விவகாரத்தில் 85 சதவீத அரசாணையை ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது. அரசாணை ரத்து தொடரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது என திட்டவட்டம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், சமநிலை முறை வேண்டும் என்பதற்காகவே நீட் கொண்டு வரப்பட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில், வேறுபாட்டை அதிகப்படுத்தும் மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai High Court Neet Supreme Court Medical Admission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment