அரூரில் அனுமதியின்றி பேனர் வைத்த 9 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.
வீட்டுக்கு வீடு வால் போஸ்டர்களை ஒட்டி தான் பெரும்பாலான விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தன. இன்னமும், விழாக்களுக்கு வால் போஸ்டர் ஒட்டுவது வழக்கமானது தான் என்றாலும்கூட, வால் போஸ்டருக்கு முன்பிருந்த முக்கித்துவம் தற்போது குறைந்து விட்டது என்று தான் கூற வேண்டும். காரணம் என்னவென்றால் பேனர் கலாச்சாரத்தின் வருகை என்றும் கூட கூறலாம்.
எந்த விழாவாக இருந்தாலும், நிகழ்ச்சியாக இருந்தாலும், வாழ்த்து தெரிவிக்க முதலில் நினைவுக்கு வருவது பேனர் தான். திருமணமாக இருந்தாலும் சரி, கோவில் திருவிழாக இருந்தாலும் சரி, சிலர் கொஞ்சம் வித்தியாசமான முறையில் பேனர் அடிக்கத் தான் செய்கின்றனர்.
அப்படிப்பட்ட சம்பவம் தான், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீரைப்பட்டியில் நிகழ்ந்துள்ளது. ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், கடந்த 11-ம் தேதி பேனர் வைத்திருக்கின்றனர். அந்த பேனரில் அவர்கள் அடித்திருந்த வாசகம் தான் இதில் ஹைலைட்ஸ். 'வயசு பசங்க நாங்க; பொண்ணு இருந்தா தாங்க' என்பது தான் அந்த பேனரில் அவர்கள் வைத்திருந்த வாசகம்.
இது குறித்து, கீரைப்பட்டியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் அரூர் போலீசில் புகார் அளித்தார். அதில், அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டுள்ளது என்றும், எனவே பேனர் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 வாலிபர்களை அரூர் போலீஸார் கைது செய்தனர்.