திருக்கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஜொலிக்க வைத்தனர்.
இன்று (டிச.6) கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி கோவில்கள் இல்லங்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
மாலை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதையடுத்து தமிழகம் தோறும் உள்ள கோவில்கள் இல்லங்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்நிலையில் கோவையில் உள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேரூர் படித்துறையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி படித்துறையை ஜொலிக்க செய்தனர்.
கோவையில் முக்கிய ஆறாக விளங்க கூடிய நொய்யல் ஆறு முக்கியம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் "நொய்யல்" என எழுத்து வடிவில் தீபங்களால் வடிவமைத்தது அங்கு வந்த அனைவரையும் கவர்ந்தது.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கடந்த பல வருடங்களாக கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை தூய்மைப்படுத்துவது, ஆற்றங்கரை பகுதிகளில் மரம் நடுவது போன்ற செயல்களை முன்னெடுத்து செய்து வருகின்றனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/