ரசிகர்கள் தனது காலில் விழ வேண்டாம் எனவும், பெற்றோர் காலில் மட்டும் விழுங்கள் எனவும், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாக ரசிகர்களை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வருகிறார். மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ரசிகர்களிடம் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முன்னதாக ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், “மதுரையிலிருந்து ரசிகர்கள் வந்திருக்கிறீர்கள். மதுரை என்றாலே வீரத்தின் அடையாளம் இரவெல்லாம் பயணம் செய்துவந்தாலும் ரசிகர்களின் முகத்தில் உற்சாகம் குறையவில்லை. உங்களை பார்க்கும்போது எனக்கும் உற்சாகம் ஏற்படுகிறது. பெங்களூருவில் இருக்கும்போது நானும் ராஜ்குமாரின் ரசிகன் தான். அதனால், உங்கள் உற்சாகத்தை புரிந்துகொள்ள முடிகிறது”, என கூறினார்.
மேலும், ரசிகர்கள் தன் காலில் விழ வேண்டாம் எனவும் அவர் கூறினார். “ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். தாய், பெற்றோர், பெரியோர், கடவுள் காலில் மட்டும் விழுங்கள்.”, என தெரிவித்தார்.
ரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போட வேண்டும் என ஆசை உள்ளதாகவும், ஆனால், ராகவேந்திரா மண்டபத்தில் சைவ உணவுதான் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். அசைவ விருந்து வேறிடத்தில் கொடுப்பது குறித்து பேசுவோம் எனவும் ரஜினிகாந்த் கூறினார்.
ரசிகர்கள் சந்திப்பின் முதல் நாளன்று பேசிய ரஜினிகாந்த், அரசியலில் தனது நிலைப்பாடு குறித்து வரும் 31-ஆம் தேதி தெரிவிப்பேன் என உறுதிபட தெரிவித்துள்ளார்.