கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும் என சினிமா தயாரிப்பு நிர்வாகி அசோக் குமார் மரணம் குறித்து விஷால் உருக்கமாக குறிப்பிட்டார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமாரின் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த அசோக் குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். மதுரையை சேர்ந்த ஃபைனான்சியர் அன்புசெழியன் மிரட்டல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சசிகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அன்புசெழியனை உடனே கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை திரைத்துறையில் வலுத்து வருகிறது.
இந்த நிகழ்வு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான நடிகர் விஷால் நேற்று இரவு ஒரு அறிக்கையை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டார் அதில் அவர் கூறியிருப்பதாவது...
கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்!
கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் இன்று தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின்னர் இதுபோல சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் தயாரிப்பாளர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் ஆதரவும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம். விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்.
தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபடுக்கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.
காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலை அல்ல. கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விஷால் கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.