வனிதா விஜயகுமார் புகார் : தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை, மதுரவாயல், ஆலப்பாக்கம் பகுதியில் இருக்கிறது. மஞ்சுளா இல்லம் என்று அழைக்கப்படும் அந்த இல்லத்தில் வசித்து வருகிறார் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார்.
அங்கு திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்வுகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவது வழக்கம். அதற்காக அந்த வீட்டினை வாடகைக்கு விட்டு அங்கே வாழ்ந்து வருகிறார் வனிதா விஜயகுமார்.
தற்போது அந்த வீட்டினை காலி செய்ய வேண்டும் என விஜயகுமார் வனிதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்தவுடன் வனிதா மீது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார் விஜயகுமார்.
இந்த புகாரினை அடிப்படையாக வைத்து நேற்று முன் தினம் (20/09/2018) அன்று இரவு வனிதா தங்கியிருக்கும் வீட்டிற்கு மதுரவாயில் உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் ஆகியோர் தலைமையில் பெண் காவல்துறை அதிகாரிகள் அங்கே சென்று வனிதாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.
அப்போது வனிதா காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து வனிதாவையும் அவர்களது நண்பர்களையும் வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றி வீட்டைப் பூட்டி சாவியை விஜயகுமாரிடம் கொடுத்துள்ளனர்.
மேலும் வனிதாவின் நண்பர்களான நரேந்திரன் (வயது 45), ஆண்ட்ரூஸ் (45), ஜோசப் மனோஜ் (43), பாலா (46), சத்யசீலன் (37), தியாகராஜன் (40), மணிவர்மா (53) ஆகிய 7 பேரை காவல்துறை கைது செய்தது.
காவல்துறை ஆணையரிடம் வனிதா விஜயகுமார் புகார்
அவர்கள் மீதும் வனிதா மீதும் கொலை மிரட்டல், பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் மதுரவாயல் காவல்துறையினர்.
நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வனிதா அளித்த முழு பேட்டியினையும் படிக்க
இதனைத் தொடர்ந்து நேற்று வனிதா விஜயகுமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழுதபடி வந்து மனு ஒன்றினைக் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “என்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் போலீஸ் படையோடு வந்து அடித்து உதைத்து வெளியேற்றினார். என்னை தரக்குறைவாக திட்டி எனது முகத்தில் தாக்கினார்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.