தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மாநில முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க சார்பில் இன்று (செப்டம்பர் 16) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க அரசு பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகிறது. ஆனால் மக்களுக்கு ஒரு நுனி அளவுக்கு கூட நன்மை கிடைக்கவில்லை. இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் தான் அமோகமாக நடைபெறுகிறது. 15 மாத சர்வாதிகார ஆட்சியில் மக்களுக்கு வேதனையும், துன்பமும் மட்டும் தான் மிஞ்சியது.
திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள்
தி.மு.க ஒரு குடும்ப ஆட்சி. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பதவி, அதிகாரம் வேண்டுமென இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது. ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர் தான் இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 4 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். தி.மு.க குடும்ப அதிகார மையமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் இன்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்று அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய மருமகன், மகன், மனைவி இவர்கள்தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.
இந்த குடும்ப ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கவில்லை. திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து வருகிறது. தி.மு.க ஆட்சி அமைந்த உடன் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரியை உயர்வு.
அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் மக்கள் பல நன்மைகளை பெற்றனர். கொரோனா தொற்றில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் போது, மக்களின் தலையில் இவ்வளவு பெரிய சுமையை சுமத்துவது நியாயமா? மின் கட்டணத்தை உயர்வை திரும்ப பெறுக, மக்களின் வேதனையை புரிந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்'' என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“