திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக 114 பயணிகளி உயிர் பிழைத்துள்ளனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாள்தோறும் இரவு 12 மணிக்கு திருச்சிக்கு வரும் ஏர் இந்தியா விமானம், அதிகாலை 1 மணிக்கு, துபாய்க்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.
கடந்த 12ஆம் தேதி, திருச்சியில் இருந்து விமானம் புறப்பட்ட போது, அருகில் இருந்த சுற்றுச்சுவரை உரசிச் சென்றது. அதுகுறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்றிரவு மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
விமானம் வழக்கம் போல ஓடுதளத்தில் பயணிக்க தொடங்கிய போது, இஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, பயணத்தை ரத்து செய்த விமானி, விமானத்தை அவசர அவசரமாக நிறுத்தினார். இதனால் விமானத்தில் இருந்த 114 பயணிகள் உயிர் தப்பின.
கடந்த 11 ஆம் தேதி நடந்த சுற்றுச்சுவர் விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணைய புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் தினேஷ்குமார் யாதவ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.
இந்த விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமானிக்கும், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் பதிவை புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.