scorecardresearch

சசிகலா சென்னை வருகை: தினகரன் தரப்புக்கு காவல்துறை மறைமுக எச்சரிக்கை?

தமிழகத்தில் பொது அமைதியை பாதிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு தமிழக காவல்துறை  தெரிவித்தது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில், தமிழ்நாடு காவல்துறையினர், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்தில் வகுப்பு, சமய, அரசியல் ரீதியான பிரச்சனைகள் ஏதுமின்றி பொது அமைதியை நிலைநாட்டி சட்டம் – ஒழுங்கை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிற அமைப்பினரைப் போல் தங்களை பாவித்துக் கொண்டு பெருந்திரளாகக் கூடி சட்டத்தை கையிலெடுத்து போக்குவரத்தையும், பொது […]

சசிகலா சென்னை வருகை: தினகரன் தரப்புக்கு காவல்துறை மறைமுக எச்சரிக்கை?
தமிழகத்தில் பொது அமைதியை பாதிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு தமிழக காவல்துறை  தெரிவித்தது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில்,

தமிழ்நாடு காவல்துறையினர், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்தில் வகுப்பு, சமய, அரசியல் ரீதியான பிரச்சனைகள் ஏதுமின்றி பொது அமைதியை நிலைநாட்டி சட்டம் – ஒழுங்கை பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிற அமைப்பினரைப் போல் தங்களை பாவித்துக் கொண்டு பெருந்திரளாகக் கூடி சட்டத்தை கையிலெடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதுபோன்ற செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதுடன், மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ இடையூறாக இருக்கும் என்பதால் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென தமிழக காவல்துறை கேட்டுக் கொள்கிறது.

இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, சசிகலா தமிழகம் வருகையை முன்னீடு 100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என தினகரன் ஆட்கள் மிரட்டல் வருவதாகவும், அவர்கள் தீட்டிய சதித் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் சென்னை காவல்துறை டிஜிபியிடம் புகார் மனுவை அளித்தனர்.

 

 

 

இதற்குப் பதிலளித்த அமமுக பொதுச் செயலாளர்  டி.டி.வி தினகரன் ,” நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக அதிமுக அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும்,டி.ஜி.பி.யிடம் மீண்டும் மீண்டும்தரும் பொய்புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச்சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு, ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவுக்கு சிறப்பு வரவேற்பு வழங்க காவல்துறை அனுமதி வழங்கியது. இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவு செய்த தினகரன், “பதற்றத்திலுள்ள சிலர் சதி செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்கக்கூடாது! எல்லா இடங்களிலும் கழக உடன்பிறப்புகள் கவனமுடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திட அன்பு வேண்டுகோள்! ” என்று பதிவிட்டார்.

இந்த சூழலில் தான் தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ahead of sasikala return tn police warns tough action against law and order violations