AIADMK 47th Anniversary : அதிமுக 47-வது ஆண்டு விழா தொடக்க நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 17) கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சிக் கொடியேற்றி வைத்தார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 1972 அக்டோபர் 17-ல் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மூலமாக தொடங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். காலத்திற்கு பிறகு சுமார் 30 ஆண்டுகள் அந்த இயக்கத்தை ஜெயலலிதா வழிநடத்தினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல அணிகளாக சிதைந்தாலும், ஜெயலலிதா உருவாக்கி வைத்த ஆட்சி அவரது கட்சியையும் தாங்கிப் பிடிக்கும் நிலையில் இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முறையே இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்கள்.
AIADMK 47th Anniversary: flag hoisting at AIADMK Head Office- அதிமுக ஆண்டு விழா தொடக்க நிகழ்ச்சி
அதிமுக தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவு பெற்று, 47-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 17) நடந்தது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கட்சிக் கொடியேற்றி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கட்சி அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்தனர். முன்னதாக அதிமுக ஆண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு இயக்கத்தை பாதுகாக்கும் அவசியம் குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள்.