அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், அரசின் ஆதரவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, அதிமுக கொறடா ராஜேந்திரன், சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் எழுதினார்.
இந்த கடிதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்குவதற்காக கர்நாடக மாநிலம் தனியார் சொகுசு விடுதியில் 20 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, குடகு மாவட்டம் மடிகேரியில், காவிரி கரையோரம் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு சனிக்கிழமை சென்றனர். இவர்களுக்கு ஆதரவாக, பெங்களூருவை சேர்ந்த அதிமுக அம்மா அணி ஆதரவாளர்களும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, அதிமுக அம்மா அணி (கர்நாடக) செயலாளரும், தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை மிரட்டி கடத்திச் செல்ல எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் முயற்சித்து வருகின்றனர். அவர்களிடம் அதிகாரம் இருப்பதால் எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி வருகின்றனர்.
எனவே, நாங்கள் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் நோக்கில் பத்திரமாக குடகுக்கு அழைத்து வந்திருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என ஆளுநருக்கு தெரிவித்திருக்கிறோம்.
எனவே, ஆளுநர் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர உத்தரவிடும் வரை இங்கேயே தங்கியிருப்போம்.”, என புகழேந்தி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.