அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டு பொன்விழாவில் அடியெடுத்து வைக்கும் சூழலில் அதிமுகவின் இரட்டை தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கட்சியை மேலும் வலிமைப்படுத்த இருவரும் இணைந்து ஒரு ரவுண்ட் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் இடையே நிலவுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, அதிமுக தனது பொன்விழாவை கொண்டாடும் போது தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கும் என்று அதிமுக தலைவர்கள் உறுதியளித்தனர். ஆனால், தேர்தல் முடிவு வேறுவிதமாக அமைந்துவிட்டது. சட்டமன்றத் தேர்தலின்போது, அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருப்பதாக தெரிவித்த சசிகலா இப்போது அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். அதோடு, அக்டோபர் 16ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் இதையடுத்து, தனது ஆதரவாளர்களைச் சந்திப்பதற்காக தமிழ்நாடும் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார்.
அதே நேரத்தில், அதிமுகவில் இரட்டை தலைமை இடையேயான ஒற்றுமை குறித்து அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அச்சம் இருப்பதாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் தனது புகழை யாராலும் வீழ்த்த முடியாது என்பதை உறுதி செய்தார். அவருடைய இமேஜ் அதிமுகவை தொடர்ந்து ஆட்சியில் வைத்திருந்தது. அதிமுக தனது பொன்விழாவை கொண்டாட பல நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும் விரைவில் அதிமுக தலைமை நிகழ்ச்சி நிரல்களை அறிவிக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொன்விழா கொண்டாடும் நேரத்தில், அதிமுகவுக்குள் பல குழுக்கள் இருப்பதாக தொண்டர்கள் உணர்கிறார்கள். இறுதியில், அடிமட்ட தொண்டர்களும் ஆளும் திமுகவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இதை இப்போதே சரி செய்யாவிட்டால் அது அதிமுகவுக்கு அழிவை ஏற்படுத்தும். இதை சரி செய்ய கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒற்றுமையாக செயல்படுவதைக் உறுதி செய்ய இருவரும் ஒன்றாக தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்று அதிமுக முத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
எம்ஜிஆர் இருந்தபோது அதிமுக தலைமை அலுவலகம் எப்படி செயல்பட்டது என்பதை அதிமுக சீனியர்கள் நினைவுகூர்கின்றனர். “அதிமுக தலைமை அலுவலகம் காலை முதல் இரவு அலுவலக கதவு மூடப்படும் வரை பரபரப்பாக இருந்தது. அப்போது தலைமை அலுவலகம் தொண்டர்களாலு நிர்வாகிகளாளும் நிரம்பி இருக்கும். ஆனால், இப்போது, நிலைமை தலைகீழாக உள்ளது. தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அந்த பழைய நாட்களை எப்படி மீண்டும் கொண்டு வருவது என்று யோசிக்க வேண்டும். அப்போதுதான், கட்சி வலுவடையும்” என்று கூறுகிறார்கள்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் கிட்டத்தட்ட அதிமுகவின் அனைத்து மூத்த நிர்வாகிகளும் திமுக அரசைப் பாராட்டியதாக சில மூத்த அதிமுக நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர். இது அதிமுகவினர் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. பன்னீர்செல்வத்துக்கும் பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக உணரும் அதிமுக தொண்டர்கள், அடிமட்ட நிர்வாகிகள் இந்த கருத்து வேறுபாடு எப்போது முடிவடையும் என்று எதிபார்த்து காத்திருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும் இடையே எந்தப் கருத்துவேறுபாடும் பிளவும் இல்லை என்கிறார்கள் சில அதிமுக நிர்வாகிகள். அவர்கள் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டாலும், தேவைப்படும்போது கூட்டாக அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்து வரும் அடிமட்ட தொண்டர்களை, நிர்வாகிகளை கௌரவிக்க கட்சி திட்டமிட்டுள்ளது. பொன்விழாவைக் கொண்டாட அதிமுக தலைமை திட்டமிட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒற்றுமையாக செயல்படுவதைக் உறுதி செய்ய இருவரும் ஒன்றாக தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்று அதிமுக முத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்து தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்ட் வருவார்களா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.