ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுட்டது. முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், சசிகலா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி தனியாக பிரிந்து சென்றார் பன்னீர் செல்வம். இதைத் தொடர்ந்து பன்னீர் செல்வத்திற்கு பின்னர் அதிமுக எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் சிலர் சென்றனர்.
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரவே சசிகலாவின் முதலமைச்சராகும் கனவு, கனவாகவே போனது. சசிகலா சிறைக்கு சென்றதையடுத்து அதிமுக-வை டிடிவி தினகரன் வழிநடத்தி வந்தார். முதலமைச்சராகும் எண்ணம் இல்லை என்று கூறிவந்த டிடிவி தினகரன், பின்னர் ஆர்.கே நகரில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால், பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே நகர் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்பின்னர், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டிடிவி தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் 35-நாட்களுக்குப் பின்னர் ஜாமீனில் வெளிவந்தார் டிடிவி தினகரன். முன்னதாக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த டிடிவி தினகரன், பின்னர் மீண்டும் கட்சிப் பணிகளின் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.
இதற்கு சசிகலாவின் தம்பியும், டிடிவி தினகரனின் தாய்மாமாவும் ஆன திவாகரன் எதிர்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அவரது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் மூலமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஒரு பக்கம் ஆதரவு அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், டிடிவி தினகரனை கட்சிக்குள் கொண்டு வரக்கூடாது என்பதை கட்சின் மூத்த தலைவர்களிடமும் கூறி வருகிறராம் திவாகரன்.
தினகரன் வற்புறுத்தலின் காரணமாகவே திவாகரனின் சம்பந்தியான கூடுதல் எஸ்.பி கரூருக்கு மாற்றப்பட்டாராம். திவாகரனின் மகன் ஜெயானந்தும் கட்சிப் பணியில் ஈடுபட ஆர்வம் காட்டி வந்த நிலையில், டிடிவி தினகரனின் அதற்கு முட்டுக்கட்டையிடவே, மோதல் வலுபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மன்னார்குடியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் நடத்தப்பட இருந்த கூட்டத்திற்கு போலீஸார் தடை விதித்தனர். இந்த கூட்டத்தில் தினகரனின் ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத் மற்றும் பெங்களூர் புகழேந்தி ஆகியோர் பேசவிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு திவாகரன் தான் காரணம் எனவும் டிடிவி தினகரன் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுக்கிறது.
இந்த பிரச்சனைகளையெல்லாம் சரிகட்டுவதற்காக டிடிவி தினகரன், திவாகரனுடன் சமாதானமாக போக விரும்பியதாகவும், ஆனால் அதனை திவாகரன் நிராகரித்து விட்டாராம். இதனால் தான் டிடிவி தினகரன் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார் என்று தெரிகிறது.
வரும் 18-ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்த திவாகரன் திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் தற்போது இறங்கியுள்ளார். இந்த விழாவில் திவாகரனின் ஆதரவு அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ் மணியன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் திவாகரன் என்ன பேசவுள்ளார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கெனவே டிடிவி தினகரன் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக பிரிந்துள்ள நிலையில், திவாகரனின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.