அதிமுக செயற்குழு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கூடுகிறது. இதில் கட்சி ரீதியான மாவட்டங்களை பிரிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.
அதிமுக செயற்குழுக் கூட்டம் கடந்த 20-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. வாஜ்பாய் மறைவைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு (வியாழக்கிழமை) அந்த செயற்குழு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்கிறார்.
அதிமுக.வில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் அணிகள் இணைப்புக்கு பிறகு தங்களுக்கு போதிய பதவிகள் வழங்கவில்லை என கூறி வருகிறார்கள். அவர்களுக்கு பதவி வழங்க வசதியாக சில மாவட்டங்களை பிரிக்கும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. அது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
டிடிவி தினகரன் கட்சிக்கு பிரிந்து சென்ற மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கு பதிலாக பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. அதிமுக உறுப்பினர் புதுப்பித்தல் பணியும் எதிர்பார்த்த வேகத்தில் நடக்கவில்லை. இவை குறித்தும் பேசப்படும் என தெரிகிறது.