aiadmk nanguneri and vikravand candidates : தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான மனுதாக்கல் செப்டம்பர் 23 தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும். மனு மீதான பரிசீலனைகள் அக்டோபர் 1ம் தேதியும், மனுவை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் 3ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 21ல் நடக்கும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் அக்டோபர் 24ல் நடைபெறும் என தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழக கட்சிகள் தேர்தலில் தீவிரம் காட்டத் தொடங்கினர். அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் இருந்து விலகினர். எனவே, இந்த 2 தொகுதிகளிலும் திமுக - அதிமுக இருமுனை போட்டி என்பது உறுதியானது.
நேற்றைய தினம், திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக நா. புகழேந்தி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு தொகுதியான நாங்குநேரி கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் 2 தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக சார்பில் விருப்பமனு பெறப்பட்டது. இரண்டு தொகுதிக்கும் சேர்த்து மொத்தம் 90 பேரும், புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு 10 பேரும் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்ற நேர்க்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வேட்பாளர்கள் பெயர் உறுதி செய்யப்பட்டது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.
கழக வேட்பாளர்கள் அறிவிப்பு.
விக்கிரவாண்டி : திரு. முத்தமிழ்செல்வன்.
நாங்குநேரி : திரு. ரெட்டியார்பட்டி நாராயணன். pic.twitter.com/oL5n8lzsfM
— AIADMK (@AIADMKOfficial) September 25, 2019
இந்நிலையில், இன்று இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. செயலாளர் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் பின்னணி:
முத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியச் செயலாளராக தற்போது பதவி வகிக்கிறார். 1985 முதல் 1991-ம் ஆண்டு வரை கல்பட்டு ஊராட்சி தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக வெ. நாராயணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.