தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், தங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் குற்ற பின்னணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த முகமது அலி சித்திக் என்பவர் திருவண்ணாமலை மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரும் பொது தகவல் அதிகாரியுமான ராஜேந்திரனிடம் விண்ணப்பம் அளித்தார்.
இந்த தகவல் வழங்கப்படாததை அடுத்து தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் சித்திக் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த ஆணையர் முத்துராஜ், சித்திக் கோரிய விவரங்களை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருவதை மேற்கோள் காட்டிய ஆணையர், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால், அனைத்து பள்ளிகளும், தங்கள் நிர்வாக குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஆகியோரின் குற்றப்பின்னணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட தலைமை கல்வி அதிகாரிக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி பள்ளிக்கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்ட ஆணையர், உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 16 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி பள்ளிக் கல்வித்துறை இயக்குனரக பொது தகவல் அதிகாரிக்கும், குற்ற ஆவண காப்பக பொது தகவல் அதிகாரிக்கும் உத்தரவிட்டார்.